Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அம்பத்தூர்: பூவிருந்தவல்லி அருகே காவலர் தேர்வு எழுதவுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு வழிக்காட்டு நெறிமுறை புத்தகத்தை அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்தியன் இலவசமாக வழங்கினார். தமிழ்நாடு சீருடைத் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்காக பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் துறையினர் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், அகரமேல், மேப்பூர் உள்ளிட்ட கிராமப்புறங்களை சேர்ந்த 45 ஏழை, எளிய மாணவர்களை தேர்வு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.
தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 750 ரூபாய் மதிப்புள்ள வழிக்காட்டு நெறிமுறை புத்தகத்தை அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியன் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். தொடர்ந்து கல்வி, உடல் தகுதி போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளனர். அதேபோல் விருப்பம் உள்ளவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளதாக காவல் ஆய்வாளர் விஜயராகவன் தெரிவித்தார். காவலர் தேர்வு டிசம்பர் மாதம் 13ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.